Wednesday, April 24, 2013

கையில் வந்து சேர்ந்த வடு


அலுவலகம் முடிந்து வெளியேறி  இறுதிப்படி கடக்கையில் ,
 அடிவயிறு உறுமியது , திடீர் இடியெனப்பசித்தது .... 
பார்வையில் பாறையே   பட்டாலும்  தின்றுவிட தோன்றுகையில் 
எத்தனையோ ஆண்டுகளுக்கு  முன்பு   கடந்து வந்த அதே  ஒலி ,
வயிறோடு சேர்த்து காதுகளையும் கவ்வியது .... 
அது என்னவென்று  ஒலி   வந்த வலி  தேட ,
 கண்ணில்  பட்டதோ தெய்வாதீனமான ஒரு காட்சி,... 

சிறுவயதில் சில்லறைகளை  சேர்த்துக்கொண்டு  ,
ஊர் முழுதும் சுற்றிவிட்டு மாலை நேரங்களில் ,
மிதிவண்டியை மிதித்து மிதித்துக்களைத்திருக்கையில்   ,
மிதமாக பசியாற மினுங்கிநின்ற  ஒலி அது ,.

ஆம்,  தல்லாடித்திரிகின்ற  தள்ளுவண்டிதானது 
வகை வகையாய்  பசியாற  வலி செய்த  வண்டியது ...
நெடுங்காலம்  கண்டிடாத , சிறு கடலை வண்டியது ., 
வேர் கடலை, வறுகடலை , கிழங்கு ,சுண்டல் ,பயறு என
 பல ராகமாய் பல காலம்பசி தீர்த்த வண்டியது ...

எத்தனை நாள் காத்திருந்தேன் , இத்தனையும் தின்று தீர்க்க .!!! ......
கடலை வண்டிஉனை  கண்டவுடன் கடந்த காலம் கண்ணில்வர ,,,
கன்னியோடு கடலை போடும்  காளயனாய் மாறியதே 
கணப்பொழுதில் மறந்தேபோனேன் ...

வண்டியதை அடைந்தவுடன் ,விலை கேட்ட வினாடியே 
பகீரரென்று  தோன்றியது  பன்மடங்கு  விலையேற்றம் ,,,
விலைவாசி ஏற்றத்திற்கு விதிவிலக்கே இல்லையென
சலித்தவாறே தந்தபின்னும் ,  நாட்டின்
பொருளாதார சிக்கல் எண்ணி சிறிதளவு  வருந்திவிட்டு ,
சுற்றும் முற்றும், அருகிலும் தொலைவிலும் முற்றிலுமாய் பார்த்தபின் 
அறிந்த முகம்  கண்ணில்படா அக்கணமே வாங்கிவிட்டேன் ,
என் விருப்ப  அவித்த கடலை ...

சாயம் பல பூசுகின்ற  நாடக மேடைச்சமுதாயத்தில் ,
ஒருகணம் சிறுவனாய் மாறி நின்று
ஆசையாய்  அவித்த கடலை  வாங்கியதை ,
அந்தஸ்து பார்க்கும்  அந்த சில நடிகர்களும்
உடன் பணியாற்றும் உருப்படிகள் எவரேனும் ,

எனை மறந்து எனக்காக நான் செய்த இச்செயலை
இழிச்செயலெனக்கூறி   இகழ்வரோ எனும் அச்சம் ,
 காலைமுதல் பணிசெய்து களைத்திருந்த எனையும் ,
 ஒரே நடையில்  வீடு சேர்த்த , வீராவேஷ  சாயமது ..

வீடு வந்து சேர்ந்தவுடம் ,காத்திருந்த கடன்காரனாய்
கவ்வியிருந்த  அடிவயிறு போட்டது ஒரு பெரும் உறுமல் ,,,
ஆசை ஆசையாய் வாங்கிவந்த அவித்திருந்த 
அக்கடலை நிரப்பத்தொடங்கியது என்  குடலை ,,,

அஹ ஹா !!!!!
என்ன சுவை என்ன சுவை ,
காலம் தாண்டி நின்ற சுவை ,,, 
அந்த வயதில் ஆடித்திரிந்த அத்தனை நினைவுகளும்
அப்படியே வந்துபோனது கடலை உன்  புண்ணியத்தில் ,,,
 நெடு நேரம் அசைபோட்டு சுவைத்தபின்னும் ஓயவில்லை 
 நெடுங்கால ஏக்கமென நீண்டிருந்த எனது நிலை .

இறுதியாய் தீரும் பொழுது இடையே நான்  கண்ட ஒன்று
இடியென மாறியே  அடிவயிரில் பாய்ந்ததென்ன ,,,!!!

சற்று கூர்ந்து பார்த்திடவே சந்தேகமே இல்லாமல்
 சவுக்கடியாய் விழுந்ததென்ன ,,,!!!

பாலகனாய் மாறிநின்று  பசியாற்றிட நினைத்ததற்கு ,
பாதகமாய் வந்து நின்று  ,பசும்  நினைவுகள் கலைந்தென்ன  ,,,!!!

அடேய் கடலைவிட்கும்  கயவா , நயவஞ்சகா !!!
உன்னிடம்  கடலை வாங்கியது தவிர ,என்னபாவம் செய்தேன் உனக்கு !!!... இப்படிச்செய்துவிட்டாயே  டா மகாபாவி !!!! 
எதை என் வாழ்வில்  காணவே கூடாது என்றிருந்தேனோ 
அதையே என் கையில்  தந்து  சென்றுவிட்டாயே  ...
 இந்தப்பாவம் உன்னை சும்மா விடாது ,,,

கடலையின் வடிவில் கபடநாடகம் ஆடிச்சென்ற உன்னை , உன்னை !!! 
ஐயோ  பாவி ,,,
தின்றதனைத்தும் திரண்டு கொண்டு வருகிறதே ...
இந்த காசு உன் உடம்பில் ஒட்டாதென்றெல்லாம்

பித்தனைபோல் பிதற்றி முடித்து  ,,,,
கணம் கொண்ட நெஞ்சத்துடன்  
கசக்கியே  தூக்கியெறிந்தேன் ,,, 

அவன் கடலை மடித்துதந்து சென்ற ,
10ஆம் வகுப்பு கணித வினாத்தாளை .... 


No comments:

Post a Comment